கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது முகநூல் பக்க பதிவில், “கொரோனா காரணமாக, துபாயில் சிக்கியிருந்த 184 பேரை, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கேரளா, கோழிக்கோடு அழைத்து வந்த ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கும் நேரத்தில், இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது என்கிற செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இதுவரை தலைமை விமானி தீபக் வசந்த் சாதே உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும், மேலும் 124 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமுற்றவர்கள் விரைவில் பூரண நலம்பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இதுபோன்ற விபத்துகள், எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.இறந்தவர்களின் உற்றார் உறவினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.