அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு குறித்து தலைமைச் செயலர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில், அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்ட அரசாணை குறித்து தலைமைச் செயலர் இறையன்பு விளக்கம் அளித்திருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அதன்படி, 2022ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது ஊழியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது இதுவும் ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், அரசு அலுவலங்களில் பெண் ஊழியர்களுக்கு பேறுகால காலத்திற்கு பின் ஊதியத்துடன் 9 மாதம் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் தன்னையும், குழந்தையையும் கவனித்து கொள்ள முடியும். இந்த 9 மாத விடுப்பானது போதுமானதாக இல்லை என்று கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதனால், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் 9 மாதமாக உள்ள பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டது.
இது குறித்து தமிழக தலைமைச் செயலர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார். இந்த அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும், 12 மாத பேறுகால விடுப்பிற்கு தகுதி உடையவர்கள் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கு, அது பணி நாளாகவே கருதப்படும் என்றும், முன்னர் விடுப்பில் சென்று, பணிக்கு திரும்பாத அனைவருக்கும் 12 மாத கால பேறுகால விடுப்பு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.




