இங்கிலாந்து கிரிக்கெட் ஆல் ரவுண்டர் மொயின் அலி, கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்திருப்பார் என வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சிஎஸ்கே அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மொயின் அலியை ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மொயின் அலி கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிந்து விளையாட உள்ள அணியின் ஜெர்சியில் மது வகையை சேர்ந்த லோகோ ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதை நீக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் மொயின் அலி கேட்டுக் கொண்டதாகவும், இதற்கு காரணமாக மது அருந்துவதையோ அல்லது மது வகைகளை விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்று மொயின் அலி குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு அவரது டீசர்ட்டில் இருந்து அந்த மதுவகையின் லோகோவை நீக்கியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் மொயின் அலி, கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்திருப்பார் என வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் இவரின் டிவிட்டர் கணக்கை முடக்கும் படியும் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.