திருப்பூர்: திருப்பூரில் ஒரு வயது குழந்தைகள் உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 380 ஆகவும் உயர்ந்துள்ளது.
திருப்பூரில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று தாராபுரம் பெரியார் நகரில் 6 வயதான ஆண் குழந்தை, திருப்பூர் எஸ்.வி காலணியில் 5 வயது மற்றும் 3 வயதான பெண் குழந்தை, அதே போன்று திருப்பூர் செட்டிபாளையம் மற்றும் முனலூரில் 1வயதான குழந்தை உட்பட மொத்தம் 38பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிப்பின் எண்ணிக்கை 342 லிருந்து 380 ஆக உயர்ந்துள்ளது.
எனவே மாவட்டத்தில் குழந்தைகள் அதிகளவில் கொரோனா தொற்றிற்கு ஆளாகி இருப்பது மக்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.