80 கோடி பேருக்கு ரேஷன் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நவம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்க பரிந்துரை ஏதும் கிடைக்கவில்லை – மத்திய உணவுத்துறை செயலாளர்.
டெல்லி,
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று பரவலின் போது நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களின் நலன் கருதி “பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தின் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்கள் மாதந்தோறும் 5 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 1 கிலோ உளுத்தம்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது; திட்டம் தொடங்கப்பட்ட போது மொத்த அமெரிக்க மக்களை விட இரண்டரை மடங்கு அதிக தானியங்களை இந்தியா மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாக கூட பெருமிதம் தெரிவித்து இருந்தார்.
2020 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட திட்டம் பெருந்தொற்று பரவல், ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 2021 நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்நிலையில் இம்மாதத்துடன் திட்டம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் திட்டத்தை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த பரிசீலனையும் அரசிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை என மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷி பாண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் நல்ல முறையில் உள்ளதாகவும், திறந்தவெளி சந்தைகளில் விற்பனையும் நன்றாக உள்ள காரணத்தினால் நவம்பர் 30ம் தேதிக்குள் மேல் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படாது என்ற சூழலே நிலவுவதாகவும், ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வ பரிந்துரை ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால், இத்திட்டம் காலவதியாக இன்னும் 3 வாரங்களுக்கு மேல் உள்ள காரணத்தினால் அதற்குள் மத்திய அரசின் இது தொடர்பான அதிகாரபூர்வ பரிந்துரை கிடக்க வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகிறது.
நாட்டின் பொருளாதாரம் மீண்டாலும், இன்னும் தனிமனித பொருளாதாரம் என்பது பெரிய அளவில் வளர்ச்சி இல்லை என்பதால் இத்திட்டம் நீடிக்க வேண்டும் என்பதே பலரின் குரலாக உள்ளது.