
நாட்டில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை தொடர்ந்து தனது தளத்தில் அனுமதித்து வந்த ட்விட்டர் நிறுவனத்திற்கு, ரஷ்யாவின் இணைய சட்டத்தை மீறியதற்காக மாஸ்கோ நீதிமன்றம் ட்விட்டருக்கு 8.9 மில்லியன் ரூபிள் (சுமார் 1,16,568 அமெரிக்க டாலர்) அபராதம் விதித்தது.
சமூக ஊடக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், தாங்கள் செயல்படும் நாடுகளின் சட்டங்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்படுவதாக சமீப காலங்களில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் அட்டகாசத்தால் இந்திய அரசு ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கூ எனும் சமூக ஊடகத்திற்கு ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவிலும் தனது ஆட்டத்தை காட்டிய ட்விட்டருக்கு பேரிடியாக ரஷ்யா அரசு அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.
ட்விட்டரில் வெளியான சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தின் ஒரு பகுதி சிறுபான்மையினரை சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவும், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சிறுவர் ஆபாசங்களை பரப்பவும் வலியுறுத்தும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு ரஷ்யாவில் நடந்து வந்த நிலையில், ட்விட்டருக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டதோடு, 8.9 மில்லியன் ரஷ்ய ரூபிள் அளவிற்கு அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து அபராதம் செலுத்த ட்விட்டருக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், ரஷ்யாவின் தொலைத் தொடர்பு கண்காணிப்புக் குழு ரோஸ்கோம்னாட்ஸர் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதால் ட்விட்டரின் இணைய ட்ராபிக்க்கை மட்டுப்படுத்தத் தொடங்கியது. மேலும் இது தொடர்ந்தாள் ட்விட்டரை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டியிருக்கும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.




