தமிழகத்தில் மிகக் கடுமையாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பல தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால், மக்கள் வீட்டிலேயே இருந்ததால் தான் மின் கட்டணம் அதிகமாகி இருப்பதாக தமிழக அரசு கூறியது. எனினும், பல மாதங்களாக பூட்டிக்கிடந்த அலுவலகங்களுக்கும் மின்கட்டணம் போடப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு, தனது நிலையிலிருந்து பின்வாங்கவில்லை.
இந்த சூழலில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மின்கட்டண உயர்வு குறித்து ஆலோசனை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன் படி இன்று, காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் மு.க ஸ்டாலின் அவரது வீட்டில் இருந்து ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடந்த திமுக கூட்டத்தில் திமுகவின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மின் கட்டண உயர்வுக்கு எதிரான திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
வரும் 21 ஆம் தேதி மின் கட்டண உயர்வை எதிர்த்து திமுகவினர் வீட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.