தமிழக ஆளுநர் அலுவலகத்தில் ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றும் திருஞானசம்பந்தம் என்பவருக்கு ஆளுநரின் விருப்புரிமை மானியமாக வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயை திரும்ப வசூலிப்பது குறித்து தமிழ்நாடு அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் அலுவலகத்தில் ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகராக 2022 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட திருஞானசம்பந்தம் என்பவருக்கு ஆளுநரின் விருப்புரிமை மானியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை வடபழனியைச் சேர்ந்த காண்டீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆளுநரின் விருப்புரிமை மானியத்தை, அறப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நிதி குறித்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கௌரவ அடிப்படையில் நியமிக்கப்பட்ட திருஞான சம்பந்தத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியது சட்டவிரோதம் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், அரசு நிதி தணிக்கை செய்வது அரசு கணக்காயர் பணி என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி, மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.




