பெண்கள் எப்போதும் வீட்டில் சமையலறையில் சமைத்துக் கொண்டேதான் இருக்கும்படி உள்ளது. சில நேரங்களில் நமக்கு எப்படா சீக்கிரம் சமைத்து முடித்துவிட்டு சமையலறையிலிருந்து வெளியேறலாம் என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றும்.
அப்போது நாம் செய்ய வேண்டிய ரெசிபிதான் இந்தப் புளித்தண்ணீர். இந்த ரெசிபி எங்கள் பாட்டி எனக்கு சொல்லித் தந்தது. இரண்டே நிமிடங்களில் இந்தப் புளிக்கரைசலை சட்டென்று செய்துவிடலாம்,இதன் ருசியும் அருமையாக இருக்கும். சரி, இப்போ புளித்தண்ணீர் எப்படி செய்றதுன்னுப் பார்க்கலாம் வாங்க..!
தேவையான பொருட்கள்:
புளி- ஒரு நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்- 15 நறுக்கியது
நறுக்கிய தக்காளி -இரண்டு
பச்சைமிளகாய்-இரண்டு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியைத் தண்ணீரில் போட்டு ஒரு அரைமணிநேரம் ஊறவைத்து ரசத்திற்குக் கரைப்பதுபோல் புளியைக் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பின் வானலியில் எண்ணையை ஊற்றி கடுகு, உளுந்து இட்டுக் கருவேப்பிலை போட்டுத் தாழித்து அத்தோடு நாம் நறுக்கிவைத்த வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும், வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை;ஓரளவுக்கு வதங்கி இருந்தாலே போதுமானது. அதற்குப பின் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும். ஓரளவிற்கு வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போது நாம் ஏற்கனவே கரைத்து வைத்திருந்த புளிக்கரைசலோடு நாம் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளியையும் உள்ளெ சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கைகளால் பிசைந்து அனைத்தையும் கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் புளித்தண்ணி ரெடி. இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அவ்வளவு ருசியாக இருக்கும். சைடிஷ்க்கு முட்டைப் பொறியல் அல்லது ஆம்பளேட் வைத்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்.
எப்போதாவது நம் கணவர் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறார், அதனால் நமக்கு மட்டும் எதாவது சாப்பிடுவதற்கு செய்ய வேண்டுமே? என்று நினைக்கும் போது இந்தப் புளித்தண்ணீரை செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இதன் ருசியும் மணமும் அவ்வளவு அருமையாகவும் இருக்கும்.
குழந்தைகளை வைத்துக் கொண்டு சமையலறையில் வெகுநேரம் நின்று கொண்டிருப்பவர்களுக்கும் இந்த ரெசிபி உதவிகரமாக இருக்கும்.சாதாரண நாட்களிலும்கூட செய்து சாப்பிடலாம்.நாம் எப்போதும் ரசமே செய்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் ரசத்திற்கு மாற்றாகக்கூட இந்தப் புளித்தண்ணீரைச் செய்து சாப்பிடலாம்,அவ்வளவு அருமையாக இருக்கும்.