இப்போதுள்ள காலத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் இரவு, பகல் பாராமல் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும் சூழ்நிலைதான் உள்ளது. அதனால் தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும் என்பது முடியாத காரியமாகத்தான் உள்ளது.
இன்னும் சிலபேர் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து வேலை செய்வதை ஒரு பெருமையாகவே சொல்லிக் கொள்கின்றனர். தம்பதியர்கள் பாதிபேர் தூங்காமல் இருந்து சண்டை போடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இப்படித் தூங்காமல் இருப்பதனால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும் என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்!.
விபத்துக்கள்
தூக்கமின்மையால் விபத்துக்கள் நடக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாம். வாகன ஓட்டிகள் இரவும்,பகலும் தூங்காமல் தங்கள் வேலைகளைச் செய்வதால்தான் விபத்துக்களும் அதிகமாக நிகழ்கிறதாம்.. குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கள் நடப்பதைவிட, தூக்கமின்மையால் ஏற்படும் விபத்துக்களே இங்கு அதிகமாக உள்ளதென்று ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்களாம்!
மூளைச் சோர்வு
இரவு சரியாகத் தூங்காமல் இருப்பவர்கள், நாள் முழுவதும் சோர்வாக இருப்பார்களாம். அதுமட்டுமில்லாமல் அவர்களின் மூளையும் சரியாக செயல்படாதாம் . நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சற்றுத் தாமதமாகவே பதிலளிப்பார்களாம். கண்முன்னே ஒரு சம்பவம் நடந்தாலும் உடனே அச்சம்பவத்தை மூளையில் ஏற்றிக் கொண்டு அச்சம்பவத்திற்கு ஏற்றார்போல் தன் மூளையை உபயோகித்து, உடனே செயலில் இறங்கமாட்டார்களாம் கொஞ்சம் தாமதமாகவே செயல்படுவார்கள். அதாவது “ட்யூப் லைட்” மாதிரி லேட்டாதான் எரியுவாங்கனு வச்சிக்கோங்களேன்.
தூக்கமின்மையால் நீரிழிவு நோய்
போதிய அளவு தூக்கம் இல்லாதவருக்கு “டைப் 2 நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளது” என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனராம் . ஒரு குறுகிய கால ஆய்வில், ஆரோக்கியமான நபர்களைக் கொண்ட ஒரு குழு இரவுக்கு 4 மணிநேரம் வரை தூக்கத்தைக் குறைத்து ஆராய்ச்சி செய்யும்போது, அவர்களின் உடலில் மெதுவாக குளுக்கோஸ் எரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாம்.எனவே அது டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு வழிவகை செய்கிறதாம்.
ஞாபக மறதி
தூங்காமல் இருப்பவர்களுக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்குமாம். அதாவது நாம் சொன்ன விஷயங்கள் எதையுமே அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவே மாட்டார்களாம். இயல்பாகவே ஆண்களுக்கு தன் மனைவி சொல்கின்ற எதுவுமே நினைவில் இருக்காது, அது தூக்கமின்மையால் வருவது கிடையாது.எல்லா ஆண்களின் பிறவிக்குணமே அதுதான். அதையும் இதையும் வைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
மன அழுத்தம்
தூங்காமல் இருப்பதால் வரும் அடுத்த பிரச்சனை மன அழுத்தம். இரவு எட்டு மணிநேரம் தூங்காமல் இருப்பவர்களுக்கு மற்றவர்களைவிட அதிகமாக மன அழுத்தம் இருக்குமாம்.
முடிவெடுக்கத் தெரியாமை
தூக்கமில்லாமல் இருப்பவர்களால் எந்தவொரு முடிவையும் சரியாக எடுக்க முடியாது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்களாம்.
எதிர்ப்பு சக்தி மண்டலப் பாதிப்பு
சரியான தூக்கம் இல்லாதவர்களுக்குஎதிர்ப்பு சக்தி மண்டலம் பலவீனமாக்கப்படுவதால்,எந்த ஒரு நோய்க் கிருமியும் எளிதில் அவர்களைத் தாக்கும் அபாயம் உள்ளதாம்..
தீர்வு
அதனால் மக்களே வேலை,வேலை என்று இரவு முழுவதும் தூங்காமல் இருப்பதைத் தவிர்த்து இரவு எட்டு மணி நேரமாவது நன்றாகத் தூங்குங்கள்.
இரவு முழுவதும் தூங்காமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்கள்,என்ன பிரச்சனையாக இருந்தாலும், உங்கள் சண்டைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு எட்டு மணி நேரமாவது நன்றாகத் தூங்கி எழுந்து அதற்குப்பின் காலையில் உங்கள் சண்டைகளைத் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.