இந்த காலத்து பெண்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள்.ஆனால், இந்த கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தின் காரணமாக நாடே ஊரடங்கில் உள்ளது. இப்பொழுது வெளியே சென்றாலும் பார்லர் திறந்திருக்காதே, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுருக்கீங்களா?கவலையை விடுங்க.வீட்டிலேயே கோல்டு ஃபேஷியல் செய்வது எப்படினு பார்போம்.
பெண்ணின் புற அழகு தான் அவர்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையை வழங்குகிறது. இன்றைய சுற்றுப்புற சூழல் கூட இதற்கு காரணமாகிவிட்டது. சருமத்தை பராமரிக்காவிட்டால், நிச்சயம் சரும பாதிப்பு ஏற்படத் தான் செய்யும். அதனால், பெண்களை தவறு கூறவே முடியாது. கூடவும் கூடாது. கோல்டு பேஷியல் செய்வதற்கான 4 வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்கள் தான். இதற்காக வெளியே செல்ல வேண்டுமென்ற அவசியமே இல்லை. வாருங்கள், வீட்டிலேயே கோல்டு பேஷியல் எப்படி செய்வதென்று பார்ப்போம்
வழிமுறை – 1
முகத்தை சுத்தப்படுத்துவதற்கு தேவையான பொருள்
காய்ச்சாதப் பால் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
காய்ச்சாதப் பச்சைப் பாலை, ஒரு பஞ்சு உருண்டையில் நனைத்து, முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர், ஒரு ஈரமான கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு முகத்தை துடைத்திடவும்.
வழிமுறை – 2
ஃபேஸ் ஸ்க்ரப் செய்ய தேவையானப் பொருட்கள்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் , தேன் – ½ டீஸ்பூன்
செய்முறை
ஒரு சுத்தமான பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது ஸ்க்ரப் தயார். கைகளை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, தயார் செய்த கலவையை எடுத்து, முகத்தில் தேய்க்க வேண்டும். அதன் பின்னர், முகத்தை தண்ணீர் மற்றும் பஞ்சு உபயோகித்து துடைத்திடவும்.
வழிமுறை – 3
ஃபேஸ் மசாஜ் க்ரீம் தேவையானப் பொருட்கள்
கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
மேலே கூறப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சுத்தமான பௌல் ஒன்றில் போட்டு, ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது தயார் செய்து வைத்துள்ள அந்த க்ரீமை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து மசாஜ் செய்யவும். பின்னர், மென்மையான டிஷ்யூ அல்லது பஞ்சு கொண்டு முகத்தை துடைத்திடவும்.
வழிமுறை – 4
ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையானப் பொருட்கள்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், பால் – 2 டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன் (எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தேனை தவிர்த்திடலாம்)
செய்முறை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும், ஒரு சுத்தமான பவுளில் போட்டு நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.இப்போது இந்த பேஸ்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு ஊற விடவும். பின்னர், தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிடவும்.
இப்படி, மாதம் இருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகம் பிரகாசமாக ஜொலிப்பதோடு, மிருதுவாகவும் மாறிவிடும். ஒரு முறை செய்வதன் மூலம் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். பார்லரில் கொடுக்கும் பணமும் இனி மிச்சமாகும். இப்போது இருக்கிற சூழ்நிலையில், இது போன்று முயற்சி செய்துப் பாருங்க.