20 சதவிகிதம் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்த அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார்.
வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதுபற்றிய பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வரிடம் இருந்து அன்புமணி உள்ளிட்டோருக்கு அழைப்பு சென்றது.
இதனை ஏற்ற அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பாமக தலைவர்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினர். அப்போது இட ஒதுக்கீடு தொடர்பாக வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வேண்டியும், 1989 முதல் தற்போது வரை டிஎன்பிஎஸ்சியில் எந்தெந்த சமுதாயத்திற்கு எவ்வளவு இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டது என்ற தகவலை அளிக்க வேண்டும் என மனு கொடுத்தோம் என்றார்.
மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் வன்னியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள். வட மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆகவே, இது ஒரு வளர்ச்சி பிரச்சினை என்று முதல்வரிடம் சொன்னோம். நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார் என்றும் கூறினார் அன்புமணி.
ரயில் மீது கல் வீசியது பற்றி பேசிய அன்புமணி, “வன்னியர் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக சித்தரிக்காதீர்கள். வன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள். காவல் துறையினர் வழிமறித்து திடீரென நிறுத்தி மணிக்கணக்காக காத்திருக்க வைத்தனர். யாரோ சிலர் செய்ததற்கு வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம்” என்று கூறினார்.