புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவின் பெயரில் கடந்த 22 ம் தேதி புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தது. இதனால். அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்வதாகவும் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர்.
Read more – இன்று வெளியாகும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
இந்தநிலையில் தற்போது, மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரமாக புதுச்சேரியில் தொடர்ந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. மேலும், பிரதமர் மோடி நாளை (பிப்.25) ஜிப்மர் கிளை கட்டிடம் திறப்பு விழா மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரில் வருகிறார். அவர் மீண்டும் டெல்லிக்கு சென்றதும் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.