சட்டப்பேரவையில் நேற்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசும்போது, சபாநாயகர் அப்பாவு இடைமறித்து பேசி கிண்டல் செய்ததால் அவை கலகலப்பானது.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள், வெளிநடப்புகள் , சட்ட திருத்த முன்வடிவு என சபை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 8) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக பாஜக சட்டமன்ற தலைவர், நயினார் நாகேந்திரனை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் இல்லை எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘இந்த சட்டம் என்றால் முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமா?’ என கேள்வி எழுப்பினார்.இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. உடனே மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் என்று தெரிவித்த நயினார் நாகேந்திரன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.
அப்போது ‘ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை’ என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார். அதற்கு உடனடியாக சபாநாயகர் அப்பாவு, ‘அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், நன்றி’ என குறிப்பிட்டதும் மீண்டும் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
இதன்பின் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன் ‘இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று கூறி பாஜக வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்தார்.
மீண்டும் குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, உங்களைத் தனியாக விட்டு விட்டு உங்கள் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்து விட்டார்களே. பார்த்தீர்களா என கிண்டல் செய்ததும் சட்டப்பேரவை மீண்டும் கலகலப்பானது.