சிறையிலிருந்து வந்த பிறகு சசிகலாவை அதிமுக சேர்த்துக்கொள்ள வேண்டுமென ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை சென்ற சசிகலா, வரும் 27ஆம் தேதி விடுதலையாகி சென்னை திரும்புகிறார். விடுதலைக்குப் பிறகு சசிகலா அதிமுகவில் இணைத்துக்கொள்ளப் படுவாரா அல்லது அமமுகவை வழிநடத்துவாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி,”இந்துக்களுக்கு வாக்குவங்கி உருவாகி வருகிறது; வரும் தேர்தலில் குறைவாக இருந்தாலும், அடுத்த முறை மாற்றம் வரும். தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாகத் திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாகக் காரணம். யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது” என்றார்.
அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல ஆளுமை உள்ளதாகவும் குருமூர்த்தி கூறியிருக்கிறார்.
read more: தை பிறந்தால் வழி பிறக்கும்: போலீஸுடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர்
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வை தோற்கடிப்பதே நமது கடமை என குறிப்பிட்ட அவர், “வீடு பற்றி எரியும் நேரத்தில் கங்கை ஜலத்திற்காக நாம் காத்திருக்க முடியாது. நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என அருண் சோரி கூறியிருந்தார். அவர் சொன்னதைப் போல திமுகவை வீழ்த்துவதற்கு சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது” என்று கூறியுள்ளார். அதாவது சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே அவர் கருத்து தெரிவித்துள்ளார்.