தேர்தல் பிரச்சாரத்தின் போது நான்கு நிமிடங்கள் அதிகமாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக, கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அரியலூர் மாவட்டம் இலந்தை கூடம் பேருந்து நிறுத்தம் அருகில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் விதியை மீறி, நான்கு நிமிடங்கள் அதிகமாக பிரசாரம் செய்ததாக, திருமாவளவனுக்கு எதிராக அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், திருமாவளவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
