மோடியின் பிறந்தநாளைத் தினமும் கொண்டாடுங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 2.51 கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி போடப்பட்டது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாகச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 79.33 கோடியைக் கடந்துள்ளது.
பிரதமர் மோடி பிறந்தநாளில் இத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “தடுப்பூசி என்பது ஒரு திட்டம். அது ஒரு செயல்முறை. அதனை, ஒருவரது பிறந்தநாளில் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் துரிதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கூட இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. 21 சதவிகிதம் பேருக்குத் தான் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒருவேளை பிரதமரின் பிறந்தநாள் டிசம்பர் 31ஆம் தேதி என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அன்றுதான் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்குமா?
தடுப்பூசி என்பது பிறந்தநாளில் கேக் வெட்டுவது போன்ற நிகழ்வல்ல. ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தடுப்பூசி போட்டது மகிழ்ச்சிதான். ஆனால், அதற்காக ஏன் பிரதமர் பிறந்தநாள் வரை காத்திருக்க வேண்டும்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியை விட அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பிறந்தநாளைத் தவிர மற்ற நாட்களில் செயல்படாத மாநிலங்களாகவே அந்த மாநிலங்கள் இருந்து வருகின்றன. பிரதமர் மோடி அவரது பிறந்தநாளைத் தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.




