சென்னையில் மீண்டும் 2015ம் ஆண்டு ஏற்பட்டதுபோல வெள்ளம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் மீண்டும் 2015ம் ஆண்டு ஏற்பட்டதுபோல வெள்ளம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் கனமழை
வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு ‘டிசம்பர் 2015’ வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தது. ஏற்கனவே 2015 டிசம்பர் வெள்ளத்தில் அ.தி.மு.க. அரசின் தோல்வியால் மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது.
ஆனால், அடைந்த தோல்விகளில் கூட எடப்பாடி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களைக் காப்பாற்றும் அடிப்படை அருகதையை எடப்பாடி அரசு இழந்து நிற்கிறது.
அவசரகால நடவடிக்கை
கொரோனாவில் தோற்ற சென்னை , இப்போது ஒருநாள் மழைக்குத் தோற்று நிற்பதற்கு, உள்ளாட்சி அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் வெட்கப்பட வேண்டும்.
கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், உடனடியாக மழை நீர் வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஏழை எளியோர்க்கு உணவு உள்ளிட்டவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2015 வெள்ளம் கூடாது
பேரிடர் மீட்புப் படையை அழைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்றப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க. அரசு செய்ய வேண்டும். தி.மு.க.வினர் மக்களுக்கு ஆங்காங்கே தேவையான அளவு உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்,