திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
வேளாண் உற்பத்தி தொடர்பான மத்திய அரசின் மூன்று மசோதாக்கள், தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றபட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும், விவசாயத்தை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் விதமாக உள்ளதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்க, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்க உள்ளது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய, வேளாண்துறை சார்ந்த உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா உள்ளிட்ட, 3 மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது