ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டுமென முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து விட்டு, மீண்டும் வெகு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே கொண்டுவர வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடங்கினார்கள்.
வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டு பணியாற்றி வரும் 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீழ் குற்றக் குறிப்பாணைகள் வழங்கியுள்ளது தமிழக அரசு. இதனால் அவர்களுக்கான பணி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பது கால தாமதமாகி வருகிறது.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என்று ஒரு முதல்வரே வேண்டுகோள் விடுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, அவர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை. இது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை; பணி ஓய்வும் கிடைக்கவில்லை. பணி ஓய்வுக்குப் பின் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. ஏன், அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கூட கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும், அடுக்கடுக்காகத் தொடர்ந்து இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி, முதல்வர் பழனிசாமி எதைச் சாதிக்கப் போகிறார் எனக் கேள்வி எழுப்பினார்.
read more: முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லை: பாமகவின் ஜி.கே.மணி
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான உணர்வினை கொச்சைப்படுத்தி நிந்திக்காமல், ஏற்கெனவே வாக்குறுதி அளித்தவாறு, 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், தமிழ் மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.




