காணொலி வாயிலாக உலகின் மிகப்பெரிய பொதுக்குழு கூட்டத்தை நடத்திய கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளதாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஆன்-லைன் உறுப்பினர் சேர்க்கை திட்டமான “எல்லோரும் நம்முடன்” தொடர்பாக, தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், தளர்வுகளுடன் பொது முடக்க நேரத்திலும், இந்தியாவே ஸ்தம்பித்துப் போயிருந்த வேளையில், நவீன தொழில் நுட்ப உதவியோடு காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தோழர்கள் , நிர்வாகிகள் மட்டுமின்றி சமூகத்தில் எல்லாத் தரப்பிலும் இருக்கின்றன ஆயிரக்கணக்கான மக்களிடத்திலும் கலந்துரையாடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எழுபதாண்டு இயக்கத்தை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உயிர்ப்புடன் வைத்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
அண்மையில் இணைய வாயிலாக நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் ஏறத்தாழ, 3800 பேர் இடம் பெற்ற அந்தப் பொதுக்குழுவைக் காணொலி வாயிலாக வெற்றிகரமாக நடத்தி, உலக அளவில் இவ்வாறு காணொலி வாயிலாக நடத்தப்பட்ட மிகப் பெரிய கூட்டங்களில் கழகப் பொதுக்குழு இரண்டாவது இடத்தைப் பெற்றது என்ற வரலாற்றுச் சிறப்பை ஸ்டாலின் உருவாக்கி தந்துள்ளதாக தென்னரசு தெரிவித்துள்ளார்.
இன்றைய வளர்ந்த தொழில் நுட்ப வசதிகளின் துணைக்கொண்டு கழகத்தின் வளர்ச்சிக்கு “ எல்லோரும் நம்முடன்” என்ற மகத்தான திட்டத்தின் வாயிலாக மின்ணனு முறையில் உலகெங்கும் இருப்போர் எவ்வித சிரமமுமின்றி இருந்த இடத்தில் இருந்தவாறே தங்களைக் கழக உறுப்பினராக இணைத்துக் கொண்டு கழக உறுப்பினர் அட்டையையும் உடனே தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய சிறப்பான திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15 ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இரண்டே தினங்களில் ஆயிரக்கணக்கில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டது,
உலகெங்கும் உள்ளோரிடம் இத்திட்டம் பெற்றிருக்கும் வரவேற்பிற்கும்; அதன் வெற்றிக்கும்; கழகத்தலைவரின் தொலைநோக்குச் சிந்தனைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்து இருக்கின்றது. கழகத்தில் தங்களை இணைத்துத் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக பெருகி வருவது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றது என, தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்