அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், ஓபிஎஸ், அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். என்னை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை என ஓபிஎஸ் கூறியிருந்தார். இதற்கிடையே பொதுக்குழு கூட்டத்திற்கு தடைசெய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக இபிஎஸ் சார்பிலும், அதிமுக தலைமை அலுவலகம் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகபட்சம் 3 வாரத்திற்குள் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை தற்போதையை நிலையே தொடரும். உச்சநீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள், உயர்நீதிமன்ற விசாரணையை பாதிக்கக் கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். மீண்டும் இருதரப்பும் சமரசம் செய்து கொள்ள தயாரா என்ற கேள்விக்கு இருவருமே மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.




