தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று ஆளும் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் படிப்படியாக அடைக்கப்படும் என, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், மதுஒழிப்பு முழுமையாக அமல்படுத்தப்படும் என வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிக்கு அமோக வரவேற்பு கிடைத்து, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனை சாவடி, அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆளும் கட்சியான அதிமுக கூறியிருந்ததாக தெரிவித்த நீதிபதிகள், 2016 ஆம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? என கேள்வி எழுப்பினர்.
மேலும், 2017,2018,2019 ஆம் ஆண்டுகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன? என்பது உள்ளிட்டவை குறித்து பதில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டடு விசாரணையை ஒத்திவைத்தனர்.




