அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திருக்குறளை எழுதியது ஒளவையார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அதிமுகவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன அமைச்சர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன். அப்பல்லோவில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாங்கன்னு பொய் சொன்னோம் என திண்டுக்கல் சீனிவாசன் சொல்ல, அது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. தொடர்ந்து பிரதமர் நரசிம்மராவ் என்றது, பழங்குடியின சிறுவனை செருப்பைக் கழட்ட வைத்தது என தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கினார்.
கடந்த வாரம் கூட இயேசுவை சுட்ட கோட்சே என்று சொல்லி மீண்டும் ஊடகங்களுக்கு தீனிபோட்டார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் பேசிய அமைச்சர் சீனிவாசன், ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்ற திருக்குறளைச் சுட்டிக்காட்டி, அரசர்களை நம்பி ஒளவையார் இந்தப் பாடலை பாடியதாகக் குறிப்பிட்டார்.
.அமைச்சர் தவறாகச் சொல்லிவிட்டதை உணர்ந்த மேடையில் இருந்த நிர்வாகிகள், திருவள்ளுவர் எழுதியதாக எடுத்துக் கூறினர். அதனை ஒப்புக்கொள்ளாமல் ஒளவையார், திருவள்ளுவர் ரெண்டு பேருமே சொல்லியிருக்காங்க. அதனால் ஒன்னும் தப்பில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
read more: விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அதன் பிறகு யாரு எழுதுனா என்ன, நம்ம கருத்து சரியா இருக்கான்னுதான் பார்க்கணும் என்று ஒருவாறாக ஒப்புக்கொண்டு மழையைப் பற்றிய தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். அமைச்சர் இவ்வாறு பேசியது மீண்டும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.