நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு முழுமூச்சுடன் தன்னார்வ பணிகளை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தன்னார்வ பணிகள்
தமிழகம் முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. வலுவான புயல் தமிழகத்தைத் தாக்க இருக்கிறது. இந்த இயற்கை இடர்ப்பாடுகள் நிறைந்த சூழலில், தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உடனுக்குடன் உதவிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறது.
நிவாரணப் பணிகளிலும், மறுவாழ்வுப் பணிகளிலும் அரசுக்குத் துணை நின்று, மக்களின் துயர் துடைக்கும் தன்னார்வப் பணிகளை அ.தி.மு.க.வினர் முழுமூச்சோடு மேற்கொள்ள வேண்டும்.
களப்பணி
அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உடனடியாகக் களப் பணியாற்றிட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் விரைந்து செய்யுங்கள். எத்தனை வேளை உணவு என்றாலும் அவற்றை மக்கள் அனைவரும் தேவையான அளவுக்குப் பெறுவதை உறுதி செய்யுங்கள். வெள்ளத்தில் ஆடைகளை இழந்தோர், அடிப்படைத் தேவைகளை இழந்தோர் அனைவருக்கும் அ.தி.மு.க.வின் கரங்கள் விரைந்து உதவட்டும்.
புகைப்படம்
தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யுங்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அவர்களோடு இருங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை செய்யுங்கள்.
அ.தி.மு.க. சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் தாங்கள் ஈடுபட்டது குறித்த முழு விவரங்களை புகைப்படத்துடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.