கடந்த ஓராண்டில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் ஒரே ஒரு ஸ்கூட்டர் மட்டுமே சொந்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசின் வெளிப்படத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின்படி,
கடந்த ஆண்டு 2.49 கோடி ரூபாயாக இருந்த மோடியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 36 லட்சம் ரூபாய் உயர்ந்து 2.85 கோடி ரூபாயாக உள்ளது. அவரது வங்கி டெபாசிட்டுகள் 3 லட்சம் ரூபாய் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் போன்ற முதலீடுகளில் இருந்து கிடைத்த வருமானம் 33 லட்சம் ரூபாய் காரணமாக பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 2020 வாக்கில் மோடியின் கையிருப்பு ரூ.31,450 ஆகும். அவரது காந்தி நகர் எஸ்.பி.ஐ., வங்கி கணக்கில் பிக்சட் டெபாசிட் மற்றும் இதர டெபாசிட்டுகள் ரூ.1.6 கோடி வைத்துள்ளார். நான்கு மோதிரங்கள் உட்பட 45 கிராம் தங்கம் என மொத்த அசையும் சொத்து ரூ.1.75 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கடந்த ஆண்டு ரூ.32.3 கோடியாக இருந்த அமித்ஷாவின் சொத்து மதிப்பு சற்று குறைந்து இந்தாண்டு ரூ.28.63 கோடியாக உள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக அமித்ஷா சொத்து மதிப்பு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமித் ஷாவின் கையிருப்பாக ரூ.15,814 உள்ளதாகவும், அவர் வங்கி கணக்கில் ரூ.1.04 கோடியம், டெபாசிட் கணக்கில் ரூ.2.79 லட்சமும், ரூ.13.47 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ், பென்சன் பாலிசிகளும், ரூ.44.47 லட்சம் மதிப்பிலான நகைகளும் உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதை.
பரம்பரை சொத்து உட்பட ரூ.13.56 கோடிக்கு 10 அசையா சொத்துக்கள் அமித்ஷா பெயரில் உள்ளன.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கணவர் மற்றும் தன்னுடைய பெயரில் கூட்டாக ரூ.99.36 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு உள்ளது என கூறியுள்ளார். மேலும் ரூ.16.02 லட்சத்துக்கு நிலம் உள்ளது. 19 ஆண்டு வீட்டுக் கடன் மற்றும் அடமானக் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் இல்லை, ஆந்திர பதிவு எண் கொண்ட பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டர் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.