பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வரும் 11 ந் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள மாநாட்டின் லச்சினையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் வெளிட்டார்.
பாமக சார்பில் ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு கொண்டாடப்பட்டு வருகிறது. சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக இவ்விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு விழா நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அறிவிப்பிற்குப் பிறகு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தனக்கு விருப்பமில்லாத கூட்டணியை அன்புமணி அமைத்துவிடுவாரோ என அஞ்சி தந்தை மகன் இருவருக்கும் இடையே அறிக்கைப் போர் நடைபெற்றது. இதனால் திட்டமிட்டபடி மாநாடு நடக்குமா நடக்காதா என பாமக மற்றும் வன்னிய சங்க அமைப்புகளிடம் கேள்வி இருந்தது. அதைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் என மருத்துவர் ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இலச்சினை
மாமல்லபுரத்தில் முழுநிலவு மாநாட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாநாட்டிற்கான இலச்சினையை வெளிட்டுள்ளார். இனமே எழு உரிமை பெறு என்கிற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த லோகோவை கட்சியின் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.