அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது தொடர்பாக, நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் நபர்கள் தண்டனை காலம் முடிந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ, எம்.பி., மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்ற வழக்குகளில் தண்டனை பெறுவது மட்டுமில்லாமல் அதுதொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஒரு வருடம் ஆனவர்கள் மற்றும் அதேப்போன்று 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்ற நபர்களும் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி நவீன் சின்கா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றங்கள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது’’ என தெரிவித்தனர்.அப்போது,” இந்த விவகாரத்தில் கண்டிப்பாக நாடாளுமன்றம் எந்த உரிய நடவடிகைகளையும் எடுக்காது. ஏனெனில் அங்கு இருக்கும் உறுப்பினர்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கடுமையான குற்றப் பின்னணி உடையவர்கள். அதனால் நீதிமன்றம் தான் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.