முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்பதால், ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில், நீதிபதி சத்தியநாராயணன் சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் எனவும்,
நீதிபதி ஹேமலதா காலதாமதமான வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.
மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வழக்கில் 3வது நீதிபதி கருத்தை அறிய வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து, இவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி பி.ஆர் கவாய் அடங்கிய அமர்வில் செப் 20ம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது என்றும், என்னென்ன காரணங்களுகாக மாற்றப்பட்டது என்பது தொடர்பாகவும் உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் ஏற்கனவே நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கு மீண்டும் கால தாமதமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது, அவ்வாறு எப்படி செய்ய முடியும் ? என கேள்வி எழுப்பினார். எனவே, நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்கை 4 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது முற்றிலும் தவறு, அதனால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரினார்.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், எந்த அடிப்படையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது ? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் , வழக்கு காலதாமதமாக விசாரணக்கு எடுக்கப்படவில்லை, உரிய முகாந்திரம் இருப்பதால் மீண்டும் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் 3வது நீதிபதி கருத்தை அறியலாம் ஆனால் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என இடைக்கால தடை விதித்தனர். மேலும் , இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்நிலையில், இன்று தமிழக அரசு சார்ப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முகாந்திரம் உள்ளது எனவும் உரிய முகாந்திரம் இருக்கும் காரணத்தினால் தான் லஞ்ச ஒழிப்பு துறையால் வழக்கு மீண்டும் விசாரணை எடுத்து கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
எனவே, வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது நீதிபதி உத்தரவு பிறப்பிக்க விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் எனவும் ராஜேந்திர பாலஜியால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையிடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு இனிவரும் நாட்களின் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிப்படும் போது வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.




