தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது பற்றி பரிசீலித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அதே சமயம் தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு வருகை தந்த தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் உமேஷ் சின்ஹா, நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும், இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் ஆகியவற்றின் செயல்முறைகளை விரிவாக விளக்கி கையேடு, சிடி வெளியிடப்பட்டது.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது என்றும் கூறினார். பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. அதனை பரிசீலித்து முடிவை அறிவிக்கிறோம் என்றார்.
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என விளக்கம் அளித்த அவர், “தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருள் விநியோகம், மது வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை” என்றார்.
read more: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: 2.75 லட்சமாக அதிகரித்த முதல்வர்!
ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏதுவாக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என்ற அவர், தேர்தலில் 80 வயதுக்குமேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த வசதி செய்து தரப்படும் எனவும் அறிவுறுத்தினார்.