மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய் மற்றும் மகள் பலியானதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாய் மகள் பலி
சென்னையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய் கரோலினா – அவரது மகள் இவாலின் ஆகிய இருவரும் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.
அரசின் அலட்சியம்
இதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியமே காரணம். திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட 2018-ம் ஆண்டிலேயே போடப்பட்ட திட்டத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசிடம் அ.தி.மு.க. அரசும் வலியுறுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு அரசுகளின் தோல்வியினால், ஏற்கனவே தந்தையை இழந்து துயரத்தில் இருந்த குடும்பத்தில் தாயும் மகளும் அரசின் அலட்சியத்திற்குப் பலியாகியுள்ளார்கள்.
மகளுக்கு உதவ வேண்டும்
தாயையும், சகோதரியையும் இழந்துள்ள இவாஞ்சலினுக்கு பெயரளவுக்கு நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக அவரை முழுமையாகக் காப்பாற்றிட அதிமுக அரசு போதிய நிதியுதவி செய்ய முன்வர வேண்டும். அந்தப் பைபாஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.