டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இது 2 ஆண்டுகளுக்குள் முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். 1921-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிய கட்டிடப்பணிகள் 6 ஆண்டுகள் நடந்தது. 90 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டிடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தினார். வீட்டுவசதி துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பாராளுமன்ற கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து சபாநாயகருக்கு எடுத்துக்கூறப்பட்டது. முக்கோண வடிவில் அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வகையில் பிரமாண்ட அரசியல்சாசன அரங்கு, ஒரு நூலகம், பல்துறை கமிட்டி அறைகள், சாப்பாட்டு அரங்குகள், பார்க்கிங் வசதிகள், அனைத்து எம்.பி.க்களுக்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவை இடம்பெறுகிறது.
இந்நிலையில் 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரமாண்ட மக்களவை அறை, 384 உறுப்பினர்கள் அமரத்தக்க வகையில் அறையும் அமைக்க உள்ளனர். தற்போது அங்கு 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர்.