தெருவிளக்கு கண்காணிப்பு கருவி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், சென்னை மாநகராட்சி ஆணையர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
தெருவிளக்கு கண்காணிப்பு கருவி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், சென்னை மாநகராட்சி ஆணையர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தெருவிளக்கு கண்காணிப்பு கருவி, தெரு விளக்குகளைக் கண்காணிக்கும் கருவி ஒன்று சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் போது அதே கருவியைச் சென்னை மாநகராட்சி 57 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்து மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
இந்தக் கருவியை 20 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்குக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதுவும் 7 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொடுப்பதற்கு முன் வந்தும் – ரூ.57 ஆயிரத்திற்கு 1 ஆண்டு உத்தரவாதத்துடன் இது போன்ற கருவிகளைக் கொள்முதல் செய்து மக்கள் வரிப்பணத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் பாழ்படுத்தியுள்ளார். அந்த அமைச்சரின் கீழ் உள்ள கோவை மாநகராட்சி இதே கருவியை 24 ஆயிரம் ரூபாய்க்குக் கொள்முதல் செய்திருக்கிறது. ஊழல், சென்னை மாநகராட்சி ரூ.57 ஆயிரத்திற்கு வாங்கியிருக்கிறது. இந்தக் கண்காணிப்பு கருவி வாங்குவதில் மட்டும் 20 கோடி ரூபாய்க்குப் பதில் 40 கோடி ரூபாயைச் செலவழித்துள்ள உள்ளாட்சித்துறை அமைச்சரும், சென்னை மாநகராட்சி கொள்முதல் அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து அதிக விலையாகக் கொடுத்த 20 கோடியை சுருட்டியுள்ளார்களா?
ஊழல் வழக்கு
இந்தக் கருவி கொள்முதல் செய்யும் திட்டம் ஜெர்மன் வங்கி நிதியுதவித் திட்டம் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. எனவே, 20 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவியை 40 கோடி ரூபாய்க்குக் கொள்முதல் செய்யும் இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுவரை பெறப்பட்ட கருவிகளைத் திருப்பிக் கொடுத்து- இந்த கொள்முதலுக்குக் காரணமான அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வரரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.