பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை :
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார், அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தன்னை பேச அனுமதி கேட்ட நிலையில், சபாநாயகர் அதற்கு மறுத்து விட்டார்.
Read more – நோட்டுக்கும் சீட்டுக்கும் மக்களின் ஓட்டுக்களை விற்றவர் ராமதாஸ் : வேல்முருகன் தாக்கு
துரைமுருகன் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேசிய திமுக பொது செயலாளர் துரை முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்ததை இப்போது ரூ.5.70 லட்சம் கோடியாக மாற்றியிருக்கிறார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யும் தொடக்கத்திலேயே கடன் தொகை பற்றி பேசுவது ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றது என தெரிவித்தார். மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று வரும்போது நாங்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவோம். அது வரை இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.