நீதிபதி கலையரசன் குழு அறிக்கையில் அடிப்படையில் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அமித்ஷா வருகை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகை, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது குறித்து எங்களுக்கு எதுவும் தகவல் வரவில்லை. அமித்ஷா அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என எல்,முருகன் கூறியுள்ளார். இருக்கலாம்.
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் எதையும் யோசிக்காமல், விசாரணை இல்லாமல், ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என அவர்களின் ஆட்சிமுறை இருந்தது. இயற்கை நியதி என்ற ஒன்று இருக்கிறது. யாராக இருந்தாலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
நடவடிக்கை எப்போது?
எந்தப் பதவியில் உள்ளவராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அதற்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். அதனடிப்படையில்தான், விசாரணைக்கு உத்தரவிடுகிறோம்.

நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தருகின்ற அறிக்கையின் அடிப்படையில்தான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.




