நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை டிரீம் லெவன் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் தொடராக தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளுக்கு உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக, அந்த தொடரின்போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டிவருகின்றன.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை ரூ. 2,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
சமீபத்தில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட எல்லை பிரச்னை காரணமாக, 59 சீன செயலிகளை தடை செய்து இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது. அதனால், இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.
அதை தொடர்ந்து ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக சீன நிறுவனாமான விவோ அறிவித்தது. இதன் காரணமாம் இறுதி நேரத்தில் டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனம் வரும் என்ற கேள்வி எழுந்து வந்தது. அதற்காக, பாபா ராம்தேவின் பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில், பி.சி.சி.ஐ நடத்திய நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்தில் 222 கோடி ரூபாய்க்கு டிரீம் லெவன் நிறுவனம் அந்த வாய்ப்பை வென்றுள்ளது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர்.