பஞ்சாப் அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள்,பௌலர்ஸ்கள் இருந்தாலும் அந்த அணியின் சொதப்பலுக்கு காரணம் என்ன என்று புரியாமல் பஞ்சாப் நிர்வாகம் திணறுகிறது.
ஐ.பி.எல் தொடர் 2020 தொடரில் அனில் கும்ப்ளே, கே.எல்.ராகுல் கூட்டணியில் பஞ்சாப் அணி புது உற்சாகத்துடன் களம் இறங்கியது. முதல் போட்டியில டெல்லியை எதிர்கொண்டது. 158 ரன் இலக்கை தொடக்கதத்தில் எட்ட திணறியது. மயங்க் அகர்வால் அதிரடி காட்ட கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. 4-வது பந்தில் ரன் எடுக்காத மயங்க் அகர்வால், 5-வது பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஜோர்டான் ஆட்டமிழக்க சூப்பர் ஓவரானது. இதில் தோல்வியடைந்தது.
அடுத்த போட்டியில் கே.எல்.ராகுல் அதிரடி சதத்தால் பெங்களூர் அணியை 97 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. என்றாலும் அடுத்தடுத்து மூன்று போட்களை ராஜஸ்தானுக்கு எதிராக, மும்பைக்கு எதிராக. சென்னைக்கு எதிராக எந்தவித போராட்டமின்றி தோல்வியை சந்தித்தது.
ஐ.பி.எல் ரன் குவிப்பில் கேஎல் ராகுல் 302 ரன்களுடன் முதல் இடத்தையும், மயங்க் அகர்வால் 272 ரன்களுடனும் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி 8 விக்கெட்டும் (அதிக ரன் கொடுத்ததால் 4-வது இடம்), காட்ரெல் 6 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இருப்பினும், அணிகளின் புள்ளிகள் பட்டியலில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றை எதிர்பார்க்க முடியும்.
டெல்லியிடம் வெற்றி பெற வேண்டிய முதல் போட்டியை இழந்தது, அந்த அணிக்கு முதல் தோல்வி முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.