எங்கள் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தொடக்கத்திலேயே 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி யுஏஇ-யில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. பின்னர் பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 156 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறும்போது, “நாங்கள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினோம் என்று நினைக்கிறேன். ஆனாலும் எதிர்பார்த்த ஸ்கோர் அமையவில்லை. மேலும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.இருந்தபோதும் பவுலிங்கில் ஆர்ச்சர் தொடக்கத்திலேயே 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். அடுத்தடுத்து சிறப்பாக பந்துவீசி மேலும் சில விக்கெட்களை எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்.
ஆடுகளம் நன்றாக இருந்தது. சில காரணங்களால் அங்கு சிறிது பனியின் தாக்கம் இருந்தது.
ஆர்ச்சரை தொடர்ந்து அவரது 3-வது ஓவரை வீச வைக்க எனது மனதில் எண்ணம் இருந்தது. இது பற்றி சில வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவரை தொடர்ந்து 3-வது ஓவரை வீச வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் போனது தவறாகப் போய்விட்டது’ என்றார்.
இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்சின் பிளேஆப் சுற்று வாய்ப்பு சிறிது மங்கியுள்ளது