ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த சூழலில் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கிவிட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பட்டாசுகளாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டிதான் முழு பட்டாசுப் பெட்டியே வெடிப்பதாக இருக்கும். இரு அணிகளும் மோதும் போட்டியானது வரும் இன்று இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதயத்துடிப்பை எகிற வைக்கும் போட்டி
ஐசிசி உலக டி 20 சர்வதேச தரவரிசையில், இங்கிலாந்துக்கு பின்னால் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகளில் தரவரிசை முக்கியமில்லை. என்னவாக இருந்தாலும் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி இதயத்துடிப்பை எகிற வைக்கப்போவது நிச்சயம்.
திணறும் பாகிஸ்தான்
அரசியல் ரீதியான பிரச்னைகள் காரணமாக இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகிறது. உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியை தோற்கடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. ஆனால் இந்த முறை பாகிஸ்தானுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது. ஏனென்றால் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானின் மற்றொரு ஹோம் கிரவுண்டாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் பல்வேறு சர்வதேச போட்டிகள் இங்கு தான் நடைபெற்றிருக்கிறது. எனவே பலம் அதிகமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி ஒருநாள் உலகக் கோப்பையில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் நாளன்று நடைபெற்றது. அந்த போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை மோசமாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டி பற்றிய விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
கோலிக்காக வெல்வோம்
9 ஆண்டு காலமாக இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு தனது தலைமைப் பதவியை விட்டு விலகுகிறார். கோப்பையை வெல்ல விரும்பும் விராட், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை, ஒருபோதும் வித்தியாசமாக உணரவில்லை என தெரிவித்துள்ளார். கோலியின் ஒரே மற்றும் கடைசி வாய்ப்பு என்பதால், இந்தியாவைப் பொறுத்தவரை “கோலிக்காக வெல்வோம்” என்ற முழக்கம், இந்தப் போட்டிகளுக்கு எல்லைக் கோட்டை நெருங்கும் அவசர முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.
டி20 கேப்டன்களின் பலம்
ஐந்து முறை ஐபிஎல் வென்ற ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், அஸ்வின், ரிஷப் பந்த் என கோலியின் அணியில் ஏற்கனவே சில டி20 கேப்டன்கள் உள்ளனர். காயமடைந்த கேன் வில்லியம்சனுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்திய புவனேஷ்வர் குமாரையும் சேர்த்தால் எண்ணிக்கை ஐந்தாகிவிடும்.
வேகத்துடன் நிதானம் அவசியம்
டி20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும், ஒவ்வொரு ஓவருக்கும் கேப்டன் எடுக்கும் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால் வேகத்துடன் நிதானமும் அவசியம் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார் கோலி.
ஐபிஎல் போட்டிகளின் சிறப்பாக விளையாடிவர்களைக் கொண்டு இந்திய அணி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஷர்துல் தாக்கூரின் வேகப் பந்துவீ்ச்சுக்காக அக்சர் பட்டேலை மாற்றியது அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கையை மூன்றில் இருந்து நான்காக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தனது அணிக்கும் தனது நாட்டிற்கும், இது ஒரு சிறப்பு வாய்ந்த போட்டி என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
இந்தியாவை வீழ்த்த துடிக்கும் பாகிஸ்தான்
எப்படியாவது இந்தியாவை வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் வீரர்களும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் கங்கணம் கட்டி வருகின்றனர். ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. பாகிஸ்தானே அதிக முறை தோற்றிருக்கிறது. உலகக்கோப்பை வெல்வதை விட இந்த மோசமான வரலாறை மாற்றியெழுத வேண்டும் என்பதே அவர்களின் லட்சியம்.
அது ரமிஷ் ராஜாவின் பேச்சிலும் எதிரொலித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரக ரமிஷ் ராஜா அண்மையில் தான் நியமிக்கப்பட்டார். இவர் வந்த பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பதவியேற்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த இவர், அணியின் பயிற்சியாளர்களாக இருந்த மிஸ்பா உல் ஹக்கும், வக்கார் யுனிஸ்ஸும் ராஜினாமா செய்யவைத்தார் என்று சொல்லப்பட்டது. இச்சூழலில் இவர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்திவிட்டால் அணிக்கு நிறைய ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் என சொல்லியிருக்கிறார்.
இந்தியாவை புகழ்ந்த இன்சமாம்
இந்நிலையில், உலகின் ஆபத்தான டி20 கிரிக்கெட் அணி இந்தியாதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான், இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது விராட் கோலி பேட் செய்யாமலேயே, எளிதாக இந்தியா வெற்றி பெற்றதை இன்சமாம் உல் ஹக் சுட்டிக் காட்டியுள்ளார். உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி இந்தியாதான் என்றும் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மோதுவதே இறுதிப்போட்டி போல த்ரில்லாக தான் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வாய் சவடாலுக்கு பதிலடி கொடுத்த சேவாக்
இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடுவோம் எனவும், இந்த முறை இந்தியாவை வெல்வது சுலபம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. அதற்கு சேவாக் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானை விட இந்திய அணி உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியில் யாரும் அதிகம் வாய் பேசமாட்டார்கள். பாகிஸ்தான் அணியில் எப்போதுமே போட்டிக்கு முன்னதே வார்த்தைகளை விட்டுவிடுவார்கள். நாங்கள் வரலாற்றை மாற்றப்போகிறோம், வீழ்த்தப்போகிறோம் எனக் கூறிக்கொள்வார்கள். ஆனால் முடிவு வேறு மாதிரி இருக்கும்.
2011 மற்றும் 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை எடுத்துக்கொண்டால், பாகிஸ்தானை விட இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்தது. இங்கு வீரர்கள் பேசுவதை விட போட்டிக்கு தயாராவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் இந்திய அணி ஐசிசி தொடர்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதற்கான முடிவுகளையும் நாம் பார்த்து வருகிறோம்.
தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் சூழலை வைத்துப்பார்த்தால் பாகிஸ்தான் அணிக்கும் சம வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் டி20 வடிவ கிரிக்கெட்டில் ஒரு வீரர் கூட ஆட்டத்தை மாற்றலாம். எனினும் இதனையாவது பாகிஸ்தான் செய்யுமா என்பதில் சந்தேகமே உள்ளது. வரும் 24ம் தேதி என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என சேவாக் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல்
இந்நிலையில் இந்திய அணியை எதிர்க்க கூடிய பாகிஸ்தான் அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான இந்த அணியில் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் ஆசிஃப் அலி களமிறங்கவுள்ளனர். பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஃபகார் சமானுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் முன்னதாக பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட அணியிலேயே இடம்பெறவில்லை.
மிடில் ஆர்டரில் ஹைதர் அலி, முகமது ரிஸ்வான், இமாத் வாசீம், முகமது ஹஃபீஸ், சதாப் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பாகிஸ்தானின் சீனியர் வீரர் சோயிப் மாலிக்கும் இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை ஹாரிஸ் ராயுஃப், ஹசன் அலி மற்றும் சாஹீன் அஃப்ரிடி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அனுபவ வீரர்கள் மிஸ்ஸிங்
இந்த அணியில் அனுபவ வீரர்களான முகமது நவாஸ், சர்ஃப்ராஸ் அகமது, முகமது வசீம் ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை. இதில் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணியை வழிநடத்தியவர் தான் சர்ஃப்ராஸ் அகமது. தற்போது அவரையே அணியில் இருந்து நீக்கியுள்ளனர். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாபர் அசாம், சதாப் கான், ஆசிஃப் அலி, ஃபாகர் சமான், ஐதர் அலி, ஹாரிஸ் ராயுஃப், ஹாசன் அலி, இமாத் வாசீம் முகமது ஹஃபீஸ், முகமது ரிஸ்வான், சாஹீன் ஷா அஃப்ரிடி, சோய்ப் மாலிக் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. அதிலும், டி20 உலகக்கோப்பையில் கடைசி மூன்று முறையும் சிரமமே இல்லாமல் இந்தியா வென்றுள்ளது. இன்று என்ன சம்பவம் நிகழப்போகிறது? வரலாறு திரும்புமா? இல்லை பாகிஸ்தான் புது வரலாறை எழுதுமா? காத்திருப்போம்.