பொதுவாக ஏதேனும் ஒரு அரசியல் தலைவரைப் பற்றி அதிகமாக செய்திகள் வெளி வந்தால், ஒன்று அவரது பிறந்த நாளாக இருக்கும் இல்லையெனில் நினைவு நாளாக இருக்கும். ஆனால், தமிழக மக்களின் மனதில் தனது கொள்கைகளாலும், செயல்பாடுகளினாலும் தினமும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சி என் அண்ணாதுரை. ஏனெனில், இன்று தமிழகத்தின் இன்றியமையாத கட்சியாக இருக்கும் திமுகவை தோற்றுவித்ததே அவர் தான். பின் திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தது தனி வரலாறு.
அரசியலில் நுழைவதற்கு முன்பு தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றினார் அண்ணா. பின்னர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் சேர்ந்தார். இதுவே பின்னாளில் பெரியாரால் திராவிட கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1944ல் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என பெயர் மாற்றிய கையோடு, ஓட்டு அரசியலில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தார் பெரியார்.
அப்போது இருந்தே பெரியாருக்கும் அண்ணாவுக்கும் சிறுசிறு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த முரண்கள் அண்ணா தனியாக கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு பெரியதானது. அப்படி உருவானது தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாருடன் முரண்பட்டாலும் அவர் கழகத்தின் மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு சிந்தனையை வளர்ப்பது என்ற கொள்கைளையே தனது கொள்கைகளாக் கொண்டிருந்தார் அண்ணாதுரை. அதை இறுதிவரை கடைபிடித்து தன் தொண்டர்களையும் பின்பற்ற வைத்தவர் அண்ணா.
தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும் மும்மொழிக் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராடியதால் திமுகவிற்கு இளைஞர்களின் ஆதரவு பெருகியது. இதன் விளைவாக, 1967 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராசரை அவரது சொந்த தொகுதியிலேயே தோற்கடித்து அமோக வெற்றி பெற்றது திமுக.
மதராஸ் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயர் வைத்தது முதல் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டியது வரை அண்ணாவின் பங்கு அளப்பரியது. எவரைக் கண்டும் அஞ்சாத அண்ணாவிற்கு கூட குரங்கை கண்டால் ஒரு பயம் இருந்திருக்கிறது. அண்ணா வசித்த பகுதியில் குரங்குகள் அதிகம் இருந்ததால், இரவில் கடித்து விடுமோ என்ற பயத்தினால் விளக்கை போட்டுக் கொண்டு தான் தூங்குவாராம்.
வாழும் போது, பல சாதனைகளை செய்தவர் தன் இறப்பிலும் சாதனை செய்து விட்டு தான் சென்றிருக்கிறார். 1806ல் பிரிட்டன் துணை தளபதி நெல்சன், 1907ல் எகித்து குடியரசு தலைவர் ஜமால் அப்துல் நாசர் ஆகியோரின் இறப்புக்குச் சேர்ந்த கூட்டத்தை அடுத்து அதிக கூட்டம் கூடியது அண்ணாவின் மறைவுக்குத் தான். இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. திராவிட கட்சிகள் இருக்கும் வரை அதை தோற்றுவித்த அண்ணாவின் புகழும் என்றும் அஸ்தமனமாகாது.