கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா (25) என்ற இளம் பெண் கடந்த 2020-ம் ஆண்டு மே 7-ம் தேதி பாம்பு கடித்த நிலையில் அவரது பெற்றோர் வீட்டில் இறந்துகிடந்தார். அதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவரின் கணவர் சூரஜ்ஜிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.
உத்ராவை திருமணம் செய்த வங்கி ஊழியரான சூரஜ், உத்ராவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பத்து லட்சம் ரூபாய், 100 பவுன் நகை, நிலம், புதிய கார் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள நினைத்தார் ஆனால் அவர் உத்ராவை விரும்பவில்லை. அதனால் அவரை இயற்கை மரணம் எய்தியதுபோல அவர் பெற்றோரை நம்பவைக்கவும், இன்னும் அதிக வரதட்சணைக்கு ஆசைப்பட்டு வேறு திருமணம் செய்யவும் சதித் திட்டம் தீட்டியுள்ளார். உத்ராவிற்கு காலில் சிறிய குறைபாடு இருந்துள்ளது. தங்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தபோதும், தன் மனைவி உத்ராவைக் கொன்று வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டம் வைத்திருந்தார்.
அடூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அணலி வகை பாம்பைக்கொண்டு கடிக்க வைத்து உத்ராவை கொலை செய்ய முதலில் முயற்சித்துள்ளார் சூரஜ். அந்த நேரத்தில் கூச்சலிட்ட உத்ராவை மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் தப்பிவிட்டார். சிகிச்சைக்குப் பின்னர் கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை சூரஜ் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்ற நல்ல பாம்பைக் கொண்டு உத்ராவைக் கடிக்க வைத்துள்ளார். பாம்பு கடித்த பின்பு உத்ரா இறந்ததை உறுதி செய்த பின்பு அந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
கேரளம் இதுவரை கேட்டிராத வகையில் கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலையும் வழக்கும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சூரஜ்ஜுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வழக்கை விசாரித்த கொல்லம் கோர்ட் சூரஜ் குற்றவாளி என நேற்று அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) சூரஜ்ஜுக்கு என்ன தண்டனை என்பதை கோர்ட் அறிவிக்க உள்ளது. அவர் கோர்ட் காவலில் இருக்கும்போதே குற்றவாளி எனத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
சூரஜ்ஜுக்கு பாம்பு கொடுத்த சுரேஷ் என்பவர் முதலில் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் கொலைக்கு எனத் தெரியாமல் பாம்பு கொடுத்ததால் பின்னர் இந்த வழக்கின் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுக் கொண்டார். இந்த வழக்கில் 87 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். 288 ஆவணங்கள், 48 பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் பாம்பைக் கொண்டு கடிக்க வைப்பதற்கு முன்பு அது சம்பந்தமாக சூரஜ் இணையதளத்தில் தேடிய ஆதாரங்களும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. மனைவி இயற்கையாக இறந்ததுபோல காட்டுவதற்காக கொலை ஆயுதமாக பாம்பை கையில் எடுத்துள்ளார் சூரஜ். மனைவியைக் கொன்றபிறகு நாக தோஷம் காரணமாக அவர் பாம்பு கடித்து இறந்துள்ளார் என்பதை காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்துள்ளார். மனைவி இயற்கையாக இறந்தால் அவரது சொத்துகளும் கிடைக்கும், வேறு திருமணமும் செய்துகொள்ளலாம் எனத் தப்புக்கணக்குப் போட்டு இந்தக் கொலைபாதகத்தை அரங்கேற்றியுள்ளார் சூரஜ்.
அதிலும், சூரஜ் பாம்பின் தலையைப் பிடித்து தன் மனைவி உத்ராவை கடிக்க வைத்துள்ளது தெளிவாகியுள்ளது. ஏனென்றால், சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1.7 செ.மீ இருக்கும் என்றும், அதன் தலையைப் பிடித்து கடிக்க வைத்தால் பற்களுக்கு இடையேயான இடைவெளி 2.8 செ.மீ வரை இருக்கும் எனவும் டம்மி மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.