அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து புயல்களின் ஆதிக்கம் தலை தூக்குகிறது.மக்கள் படும் துயர் மாறா துயராகவே மாறி வருகிறது.வீடுகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தடம்பதித்து பாம்பை போல் படம் எடுத்து ஆடுகிறது.
பல முன்னணி கட்சிகள் முதல் நிவர் புயலின் ஏற்பட்ட சேதாரத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைக்கிறார்களே தவிர,அதற்கான விடயம் இன்றளவு வரை கேள்வி குறியாகவே இருந்து வருகிறது.
கடந்த 2015 ல் ஏற்பட்ட டிசம்பர் வெள்ளம் இன்று வரை நமக்கு மறையாத வடுவாகவே இருந்து வருகிறது.கிட்டத்தட்ட 18 லட்ச மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி 6,605 முகாம்களுக்குள் அடைக்கலம் அடைய செய்தது.அடுத்த ஆண்டே வந்த வர்தா புயல் அனைத்தையும் வாரி சுருட்டி கொண்டு சென்று விட்டது.
2017 ல் வந்த ஓகி புயல் முக்கடல் இணையும் கன்னியாகுமரியை கதறவிட்டது.2018 ல் கஜா புயல் மனித உயிர்கள் முதல் கால்நடை வரை பலியாக்கி..பல கோடி மதிப்புள்ள விவசாய நிலங்களையும் நிர்மூலமாக்கியது.
இந்த ஆண்டு ஒரு புறம் கொரோனாவில் ஆரம்பித்து இப்பொழுது நிவர் புயலில் வந்து நிற்கிறது.இவை அனைத்தும் ஒரு வித இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் இவை அனைத்தும் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு வகையில் மக்களாகிய நாமும் ஒரு காரணமாய் தான் இருந்து வருகிறோம்.இது என்ன புது கதை என்று நீங்கள் சிந்தித்தால் அதற்கான விளக்கமும் எங்களிடம் உள்ளது.
விஞ்ஞானிகளின் கணிப்பின்படி 27 டிகிரி செல்சியஸ்க்கு மேல் கடல் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கும் போது இயற்கையாகவே ஒரு புயல் உருவெடுக்க தொடங்கி விடுகிறது.கடல் மேற்பரப்பில் ஒரே ஒரு செல்சியஸ் வெப்பம் அதிகரித்தாலும் கூட அதனால் ஏற்படும் விளைவுகள் மிகப் பெரியதாகவே இருக்கும் என்கிறார்கள் .நாம் வீடு மற்றும் அலுவலங்களில் பயன்படும் குளிர்சாதனங்களின் உயர் வெப்ப சலனத்தின் தாக்கம்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் வெளிப்படும் புகையின் அளவு.தொழிற்சாலைகளில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள் கடல் மற்றும் நிலப்பரப்பை நாசம் செய்கின்றனர்.இவையனைத்தும் காலத்தின் தேவைகள் என்றாலும் தொடர் மாற்றம் நமக்கு தொடர் தாக்குதலை நடத்தி விடுகிறது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மட்டும் தென்னிந்திய கடற்கரைகள் சுமார் 300க்கு மேற்பட்ட புயல்களை கடந்து உள்ளது. மனித வளர்ச்சியின் வெளிப்பட்டால் நம்மை சுற்றியுள்ள சுற்று சூழல் எவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது என்று நாம் உணர்ந்தாக வேண்டும்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 14 புயல் அதாவது வங்காள விரிகுடா கடல் 7 புயல்களையும்,அரபி கடல் 7 புயல்களையும் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மிக பெரிய வருத்தம் எனனவென்றால் இங்கு எங்கு புயல் தாக்கினாலும் சென்னை மற்றும் கடலூர் பகுதி மக்கள் முதலில் பாதிக்கப்பட்டு வீடுகளில் தண்ணீரை பன்னீர் தெளித்து வரவேற்கும் கட்டாய சூழலில் சிக்கி கொள்கிறார்கள்.தண்ணீரை வீடுகளிலிருந்தும்,சாலைகளில் இருந்தும் வெளியேற்ற தெரிந்த அரசிற்கு அதை வீடுகளுக்குள் வரவிடாமல் தடுக்கும் முயற்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை போல…
குடும்ப தேவைக்காக கூட்டம் கூட்டமாய் குவியும் மக்கள் நோட்டுக்கு ஒரு பக்கம் ஓடுகிறார்கள்..ஆட்சியை பிடிக்க நீ நான் என்று பல கட்சிகள் மக்களை மறுபக்கம் ஓட்டுக்காக தேடுகிறார்கள்..யாரை குற்றம் சொல்லி என்ன மாற்றம் பெரிதாக வந்துவிட போகிறது.. இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் புரவி புயல் வருவதற்குள் கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது ஒரு படகை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டியது தான்..நமது முன்னெச்சரிக்கைக்காக..
கட்டுரையாளர்: முகேஷ் கண்ணன்