முதன்முறையாக தமிழ் மொழிப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திருச்செந்தூர் மாணவிக்கு துர்காவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன்படி தமிழகத்தில் முதன்முறையாக தமிழ் மொழிப் பாடத்தில் மாணவி ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா. இவர் ஆறுமுகநேரி தலைமை காவல் அதிகாரி செல்வ குமாரின் மகளாவார். அங்குள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் இவர், கடந்த மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதினார்.
இன்று முடிவுகள் வெளியான நிலையில், தமிழ் மொழிப் பாடத்தில் 100-க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பாடத்தில் மாணவி ஒருவர் நூற்றுக்கு நூறு எடுப்பது இதுவே முதல்முறையாகும்
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், ஆங்கிலம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் எளிய முறையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக முடியும். பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது என்று கூறினார்.