திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், அங்கிருந்து தப்பி 3 கி.மீ. தூரம் நடந்தே சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருவண்ணாமலை, சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த 40 வயதான நபர், அங்குள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு கடந்த 6-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து திடீரென அவர் மாயமான நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் எங்குத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற திருவண்ணாமலை கிழக்கு போலீசார், இறந்து போன நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரனையில், இறந்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றவர் என்பது தெரியவந்தது.
மேலும், சிகிச்சையில் இருந்த அவர், மருத்துவமனையில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் இரவு நேரத்தில் வீட்டுக்கு நடந்தே செல்ல முயன்றதால், மூச்சுத்திணறல் அதிகரித்து, மயங்கி விழுந்து இறந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபரின் சடலத்தை பாதுகாப்பு வழிமுறைகளைக் கைக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கே எடுத்துச் சென்று, நேற்று மாலை சுகாதார முறைப்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.