தமிழக அரசு மாணவர்களுக்கான பாட புத்தகங்களில் மத்திய அரசு மற்றும் ஆளுநர் தொடர்பான விவரங்களின் மாற்றத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
மாநில பள்ளி கல்வித்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாட திட்டங்களில் திருத்தங்கள், மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதேசமயத்தில் ஒரு ஆண்டில் வழங்கப்பட்ட புத்தகங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் அல்லது பிழைகளை திருத்த வேண்டும் என்றால், அவற்றை அடுத்தாண்டு செய்யப்படுவதுண்டு.
கடந்த 2018-ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய பாட புத்தகங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகம் திருத்தங்களை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய அரசு என்று சொல்லுக்கு பதிலாக ஒன்றிய அரசு எனவும் ஆளுநரின் அதிகாரம் குறித்து இடம்பெற்றிருக்கும் தகவலை மாற்றவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விரிவுரையாளர்கள், நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.