சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின் பதவி ஏற்றார்.

சென்னை:
சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின் நேற்று பதவி ஏற்றார். இவர் பெரு நாட்டின் லீமா நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 2017-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை ஆலோசகராக பணிபுரிந்தார்.
2015 – 2017ம் காலக்கட்டத்தில் வாஷிங்டனில் உள்ள ஹெய்டி சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் சர்வதேச உறவுகள் அதிகாரியாக பணியாற்றினார். ஜூடித் ரேவின் தனது இளங்கலை படிப்பை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் படித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சரளமாக பேசுவார். 2003-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறையில் சேருவதற்கு முன்பாக ஜூடித் ரேவின் பத்திரிகை நிருபர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பு ஆசிரியர் என்று பன்முக தன்மையாளராக விளங்கினார்.
சென்னையில் துணை தூதராக அவர் பணியாற்ற இருக்கும் காலக்கட்டத்தில் , தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற இந்திய பகுதிக்களோடு புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தூதரகத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேம்படுத்தும் பொறுப்பை மேற்கொள்வார்.




