சென்னையில் கனமழை பெய்துள்ள காரணத்தால் தண்ணீர் தேக்கம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை தொடர்ந்து, சென்னையில் நேற்று பெய்த கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையில் கடந்த 2014-ஆம் ஆண்டு, 851 இடங்களில் பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. 2017-ஆம் ஆண்டு மழைக் காலங்களில், 306 இடங்களில் சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கி இருந்தது.
சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் மண்டலம் 7,11 மற்றும் 12-ல் உலக வங்கி மூலமாக ரூ.1,200 கோடி நிதி உதவி பெற்று, 406 கிலோ மீட்டர் நீளம் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் விடுபட்ட, தூர்ந்து போன மழை நீர் வடிகால் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு 412 இடங்களில் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பெய்த மழையில் 3-ல் இருந்து 10 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சர்வதேச அளவில் 6 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும்போது குறைந்தது 2 மணி நேரம் நின்று செல்லும். ஆனால், தற்போது பெய்த மழையால் இரண்டு மணி நேரத்திற்குள் மழை நீர் அகற்றப்பட்டது.
சென்னை மக்கள் வடகிழக்குப் பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 044 2538 4530, 044 2538 4540. 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது