இன்று முதல் தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவில்லை.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ் பெற வரும் மாணவர்களும், தனித் தேர்வர்களும் அவசியம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.