காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காஞ்சிபுரம், முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள கழிவுநீர் பாதாள சாக்கடையை கடந்த 20-ஆம் தேதி சுத்தம் செய்வதற்காக இறங்கும் போது லட்சுமணன் மற்றும் இவரை காப்பாற்றச் சென்ற சுனில் ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த லட்சுமணன் மற்றும் சுனில் ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.




