சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. அ ரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்துப் பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு 18.11.2020 முதல் 20.11.2020 வரை, 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியிருந்தார். அதன்படி இந்தக் கலந்தாய்வில் தினந்தோறும் 500 மாணவர்கள் பங்குபெற உள்ளனர்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பின், முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டுடன் நேற்று கலந்தாய்வு நடைபெற்றது. அதில் 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணையும் வழங்கப்பட்டது.
கொரோனா பதற்றத்திற்கிடையே நடந்த இந்தக் கலந்தாய்வில், உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளே செல்வதற்கு முன்னர் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். அதே போல மாணவர்களுக்கும், சான்றிதழ் சரிபார்க்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
நேற்று மொத்தமாக 262 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்தக் கலந்தாய்வில், இதில் கலந்துக் கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களும், பெற்றோர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.